Wednesday, January 13, 2010

தைப்பொங்கல்


உங்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் எமது பாரம்பரியங்களை கைவிட்டு விட முடியாது அதை மக்கள் கைவிடவும் மாட்டார்கள்
தைப்பொங்கல் தினத்தை ஒட்டி இக் கட்டுரை உங்களுக்காக;


தைப்பொங்கல்
தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.


தைப்பொங்கல் வரலாறு
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.


உழவர் திருநாள்
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.


பொங்கல் வைக்கும் முறை
தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆய்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம் தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதுகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.

பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


பொங்கலை ஒத்த பிற விழாக்கள்
மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்

அதிக நேரம் டிவி பார்ப்பதால் இதய நோய் வரும் அபாயம்


 அதிகநேரம் தொலைக்காட்சி (டிவி) பார்த்துக் கொண்டிருந்தால் இதயநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தொலைக்காட்சியை, அவர்கள் பாதிப்புகளை உருவாக்கும் முட்டாள் பெட்டி எனவும் குறை கூறினர்.

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் சர்வதேச படிப்புக்காக தொலைக்காட்சி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.

தற்போது 80 சதவீதத்துக்கும் மேலானோர் நாள்தோறும் 4 மணி நேரத்திற்கு குறையாமல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கிறார்கள். இது தவறான செயலாகும். ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு குறைவான நேரம் தொலைக்காட்சிகளை பார்த்தால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் தப்பிக்க முடியும்.

தொலைக்காட்சிகள் மட்டுமின்றி கண்களை கூர்ந்து பார்வையிடச் செய்து கார்களை இயக்குவது, கணினி முன்பு அமர்ந்திருப்பது போன்றவையும் உடல் நலத்திற்கு கேடானது என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக மொத்தம் 8,800 பேர் 6 ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் தொலைக்காட்சி பார்க்கும் அளவு மற்றும் உடல்நிலைக் குறித்து பதிவு செய்யப்பட்டு வந்தது என்றார் அவர்.

தொலைக்காட்சிப் பார்ப்பதற்கு அதிகநேரம் ஒதுக்குவதால் உடலில் கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஆராய்ச்சிக்காக கண்காணிக்கப்பட்டவர்களில் 284 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 87 பேர் இதய நோயாளும், 125 பேர் புற்றுநோயாலும் இறந்தனர்.

அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் இதயநோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அமெரிக்க இதயக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.