Thursday, January 7, 2010

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சந்திரனில் பெருமளவில் தண்ணீர் உண்டு என அமெரிக்காவின் "நாசா" விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர்.



சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்வ தற்காக இந்தியாவிலிருந்து "சந்திரயான் 1" செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிய தகவல்கள் மூலமாக அங்கு தண்ணீர் இருப்பது தெரியவந்தது.

சந்திரனின் மேற்பரப்பு முழுவதும் நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என இந்திய விண்வெளி ஆராய்ச்சிமைய (இஸ்ரோ) விஞ்ஞானிகளும் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். "சந்திரயான் 1" செய்கைக்கோளில் அமெரிக்காவின் "நாசா" சார்பில் "சந்திர யான் கனிமவள கண்டுபிடிப்பான்" கருவி ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கருவி அனுப்பிய கதிர்வீச்சின் எதிரொலி மூலமாக, "சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் (ஹைட்றஜன் மற்றும் ஒக்சிஜன் மூலக்கூறுகள்) உள்ளமை" தெரியவந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சந்திரனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து "லெக்ராஸ்" என்ற செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் இணைக்கப்பட்டிருந்த "சென்டவுர்" என்ற ரொக்கெட்டை சந்திரனின் தென் துருவத்தில் மோதச்செய்தனர். கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி இது நடந்தது. அப்போது, சந்திரனின் மேற்பரப்பில் 20 முதல் 30 மீற்றர் ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டது.

அந்தப் பள்ளத்தில் இருந்து ஏராளமான பனிக்கட்டிகள் சிதறி வெளியேறின. அவற்றின் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்கும். அவற்றை அமெரிக்க விஞ்ஞா னிகள் ஆய்வு செய்தனர். அப்போது சந் திரனின் மேற்பரப்பில் போதுமான அளவுக்குத் தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக ரூபா ஆயிரத்து 185 கோடி செலவிடப்பட்டுள்ளது.

"லெக்ராஸ்" திட்டத்தின் இயக்குநரும் விஞ்ஞானியுமான அந்தோனி கோல பிரட்டி கலிபோர்னியாவில் சனிக்கிழமை இது தொடர்பாகப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை வருமாறு:
"சந்திரனின் மேற்பரப்பு வறட்சியா னது என்றும் அங்கு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை என்றும் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால், சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதுவும் சிறிதளவு அல்ல. மிகப் பெரிய அளவில் அங்கு தண்ணீர் இருக்கிறது.
"ரொக்கெட் மோதியதால் ஏற்பட்ட 20 முதல் 30 மீற்றர் ஆழப்பள்ளத்திலிருந்து தண்ணீர் கிடைத்துள்ளது. இது ஆரம்ப கட்டப் பரிசோதனையின் முடிவாகும். சந்திரனின் தென் துருவத்தின் அருகே நிரந்தரமாகவே ஒரு கற்றையான அடையாளம் தெரிகிறது. அது தண்ணீராகத்தான் இருக்கும்.
"ரொக்கெட் மோதிய இடத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளிபடவில்லை. சந்திரனில் தண்ணீர் இருப்பது, மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.'' இவ்வாறு விஞ்ஞானி அந்தோனி தெரிவித்துள்ளார்.

பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்


வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.



ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.